துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு நடத்திய கல்விக் கருத்தரங்கு 14.06.2010 திங்கட்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டல் ரிக்காவில் நடைபெற்றது.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார்.அவர் தனது உரையில் தமிழகத்திற்கு அமீரகத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விடப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டபோது பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் புதுவை அமைச்சர் ஷாஜஹான் தந்தை தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் மத்திய விமானப்போக்குவரத்துத்துறையில் அமைச்சராக இருந்த போது தான் இக்கோரிக்கை ஏற்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். முன்னதாக ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார்.
பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் ஈமான் அமைப்பு மேற்கொண்டுவரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார். ஈமான் அமைப்பு அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு அளித்து வரும் உயர்கல்வி உதவித்தொகை குறித்தும் விவரித்தார். விரைவில் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி நிறுவனம் துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி சுரேஷ், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன் ஆகியோர் ஈமான் அமைப்பு சமய நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வருவதைப் பாராட்டினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈமான் அமைப்பு கடந்த 35 ஆண்டுகளாக சமுதாய மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சமூக நல்லிணக்கப்பணிகள் குறித்து விவரித்தார். இத்தகைய அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்விக் கருத்தரங்கில் புதுவை அமைச்சர் ஷாஜஹான் அவர்கள் பங்கேற்றிருப்பது இவ்வமைப்பு கிடைத்துள்ள அங்கீகாரம் எனக் குறிப்பிட்டார். ஈமான் அமைப்பின் கல்வி உதவித்தொகை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் உள்ளிட்டோர் படித்துத் தேறியுள்ளனர். இதுபோன்ற பணிகளுக்கு ஈடிஏ அஸ்கான் நிறுவனம் மற்றும் அதன் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் காக்கா உள்ளிட்டோரது பங்கு முக்கியமானது என்றார்.
புதுவை அரசின் பொதுப்பணித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.ஓ.ஹெச்.எஃப். ஷாஜஹான் அவர்கள் கல்விக் கருத்தரங்கில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சீனம் சென்றேனும் சீர்கல்வி பெறுக என்ற நபிகளாரின் வாக்கினை நினைவு கூர்ந்தார். புதுவை மாநிலத்தில் ஆரம்பக்கல்வி மற்றும் உயர்கல்வியின் தரமானதாக இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவையில் கல்வித்தரம் குறித்த திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியா பாராட்டியதை விவரித்தார்.
இந்தியாவில் மனிதவளம் அதிகம். அவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதன் மூலம் நமது முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது போல் இந்தியா சூப்பர் பவராக ஆவது உறுதி.
ஈமான் அமைப்பு துபாயில் அனைத்து சமூக மக்களிடம் இணைந்து சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் கத்தீம் நன்றி கூறினார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் ஈமான் அமைப்பின் புரவலர்கள், நிர்வாகிகள், சகோதர அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
|